மொகாலி: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின்முதல் ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
3 டி20 கிரிக்கெட் போட்டிகொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி,இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையே குறுகிய வடிவிலான இருதரப்பு தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு மொகாலியில் நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மா,விராட் கோலி ஆகியோர் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட உள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் 14 மாதங்களுக்குப் பிறகு களமிறங்க உள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
அணியின் கேப்டனான ரோஹித்சர்மா, 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடியது போன்று பவர்ப்ளேவில் ஆக்ரோஷ அணுகுமுறையைத் தொடர்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் விராட் கோலி நடு ஓவர்களில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க முயற்சிக்கக்கூடும்.
தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன், ஜெய்ஸ்வால் களமிறங்க உள்ளார். முதல் ஆட்டத்தில் விராட் கோலி சொந்த காரணங்களுக்கு விலகியுள்ளதால் அவரது இடத்தில் ஷுப்மன் கில் களமிறங்கக்கூடும். திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்க்கக்கூடும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெறுவதில் ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன்ஆகியோர் இடையே போட்டி நிலவக்கூடும். எனினும் ஜிதேஷ்சர்மாவே இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் கடந்த இரு தொடர்களிலும் அவர் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டிருந்தார்.